வராகா நதிக்கரையோரம் - அழகுராஜ்

        


கடும் நிசியைப் போல தான் அந்தப் பொழுது இருந்தது. ஆனால் மணி என்னவோ 8:15 தான். அந்த நேரத்தில் ஏற்கனவே, வந்து போன பழக்கம் இருந்தும் அன்று ஏதோ ஒன்று புதிதாக இருந்தது. திருவிழா கோலத்தின் ஒளியின் அம்சம் அன்றைய இரவில் கைகூடி இருந்திருப்பதை உணர்ந்ததும் கூடுதல் காரணமாக இருக்கலாம். இவை எல்லாம் இப்படி இருக்க எண்ணத்திற்கு வலு சேர்க்கும் பெரும் அம்சமாக கல்லூரி பெண்களின் ஒப்பனையான முகமும் வாலிப்புடைய நடையும் வந்து சேர்ந்ததை எப்படிச் சொல்வது. கூட்டம் கூட்டமாக பெண்கள் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கும் அந்த நேரத்தில் எத்தனையோ பையன்கள் ஜியோ சினிமாவில் ஐ.பி.எல். பார்த்துக் கொண்டிருப்பார்கள். அது எதையும் அறியாமல் அவர்கள் அங்கே நின்று சிரிக்கவே செய்தனர். அந்த நேரத்தில் அவனது வருகையும் குறிப்பிடப்பட்ட இடம் நோக்கிச் சென்றது‌. ஐ.பி.எல் ரசிகர்களில் அவனும் ஒருவன் தானே. அவன் மட்டும் ஸ்கோர் என்ன என்று தெரியாமல் இருந்து விடுவானா? இவன் கூகுளில் ஸ்கோர் பார்த்துவிட்டு பயங்கரமான கம்பாக் என போட்டியில் முடிவு எப்படியாகும் என்று எந்த வியூகமும் இன்றி பூவரசனுக்கு போன் போட்டு பேசிக் கொண்டிருந்தான். போன் போட்டு பேசியதற்கு ஐ.பி.எல் மட்டும் காரணமல்ல. அங்கு நின்று சிரித்து பேசிய பெண்கள் கூட்டமும் ஒரு காரணம். அந்த இடத்தில் தனியனாக வேடிக்கை பார்த்து கொண்டு நிற்பதற்கு அவன் அதிக சங்கோஜப்பட்டான். எல்லா பையன்களுக்குமான உளவியல் அது. அருகில் தன் நண்பன் நிற்கும்போது கூட்டத்தின் மத்தியில் நடந்து கொள்வதற்கும் தனி ஆளாக கூட்டத்தின் மத்தியில் இருப்பதற்கும் இடையில் எவ்வளவோ வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. அந்த இடைவெளியை ஓரளவு நிரப்பும் பெரும் வசதியாகவே கைகளில் செல்போன்கள் பாரதியின் கற்பனையாலோ விஞ்ஞானிகளின் ஆர்வக்கோளாறாலோ கையளிக்கப்பட்டு இருக்கின்றன. இவனது கையில் இருந்த ஃபோன் கோளாறுகளாலே ஆனது அல்லது அடிக்கடி கோளாறு பிடிக்கக் கூடியது என்று தீர்மானமாக சொல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்த இடத்தில் போனை நோண்டுவதை விட போன் பேசுவது மட்டுமே உசிதமான முடிவு என்பதால் அவன் பூவரசனிடம் பேசிக் கொண்டிருந்தான். திருத்தங்கலில் உள்ள அவரது வீட்டின் குளியலறையில் இருந்து வெளிவந்த பூவரசனும் இந்த கிரிக்கெட் சமாச்சாரங்களை சீரியஸாக எடுத்து கம்பெனி கொடுத்துக் கொண்டிருந்ததால் அந்த இடத்தில் நாம் சும்மா வேடிக்கை பார்க்கவில்லை. போன் பேசிக் கொண்டே வேடிக்கை பார்க்கிறோம் என்ற ஆறுதல் அவனுக்கு. ஏன் அங்கு போய் அவன் நின்று கொண்டிருக்க வேண்டும் என்பதற்கும் அந்த இடத்தை விட்டு வேறு எங்கும் நிற்கக் கூடாதா என்பதற்கும் ஒரே விடை தான். சந்துரு நான் அங்கு வருகிறேன் என நிற்கச் சொன்னதால் நின்றான். வேறு எங்கேயும் நிற்கச் சொல்லியிருந்தால் கூட இவனுக்கு இவ்வளவு உவப்பான தொடக்கம் அமைந்திருக்குமா என தெரியவில்லை. இது அவனுக்கான தொடக்கம். ஏன் இது இவ்வாறு தொடங்கப்படுகிறது என்று கேள்விக்கான விடைகளை அடுத்த சில வரிகளில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

       7:30 மணிக்கு வீட்டில் இருந்து வெளியேறி பஸ் ஏறிய போது லேசான தூறலுடன் பயணம் தொடங்கியது. பயணம் என்ற சொல்லுக்கான அர்த்தமாக 12 மணி நேரங்களை கடந்த போக்கு என்ற ஒரு வரையறை உண்டு. அந்த வரையறைக்கு சான்று சொல்வதற்கான முயற்சியின் தொடக்கமாக அன்றைய நாளை நாம் கருதலாம்‌. பொதுவாக ஒவ்வொரு பயணத்திலும் பயணப்படும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ஆயத்தங்களே மேற்கொள்ளப்படுகிறது. பெரும்பான்மையோர் டீசர்ட்களிலேயே  தங்கள் பயணத்தை அமைத்துக் கொள்வர். வேறு சிலர் நாம் போகும் இடங்களில் விதவிதமான முறையில் நின்று படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற அவா கொண்டு புதிய சட்டையையோ அல்லது தன்னிடமுள்ள உடைகளில் விலை உயர்ந்ததையோ அணிந்து கொள்வர். சிலர் புதிய ஆடைகளை வாங்கக்கூடியதும் உண்டு. புதிதாக ஆடைகள் வாங்கி டூரில் அதை அணியாமல் இருந்தவர்களை நான் பரிதாபக் கண்களோடு இப்போது பார்க்கிறேன். இவையெல்லாம் ஆடை அணிதல் தொடர்பான சமாச்சாரங்கள். பொதுவான ஆயத்தப் பணியில் சுற்றுலா செல்லும் இடங்களுக்குள் மலைப்பகுதியும் அடங்கியிருந்தால் எடை குறைந்த வாட்டர் கேனை கைகளில் ஏந்திக்கொள்வர்.சிலர் மிருகசாலைக்கு சென்றபோது செய்த கூத்துக்கள் நினைவுக்கு வருகிறது. பையை முதுகில் மாட்டியிருப்பவருக்கு அதிக சுமை மேலும் ஏற்றப்படும் என்பதற்கான சான்றுக்கு அங்கு கொண்டு போய் இருந்த பையை எடுத்துக் கொள்ளலாம். அந்த பைக்குள் நொறுக்கு தீனிகளும் கடலை மிட்டாய்களும் புளிப்பு மிட்டாய்களும் அடக்கம். பாப்கார்ன் போகும் இடங்களிலேயே வாங்கிக் கொள்ளும் வசதி எல்லா சுற்றுலா தலங்களிலும் உண்டு. குறிப்பாக கடற்கரை பகுதிகளில் சொல்லவே வேண்டாம் கண்டிப்பாக பாப்கார்ன்கள் இருக்கும். அவனும் ஒருவருக்கு பாப்கார்ன் வாங்கித் தருவதாக சொல்லி ஏமாற்றியிருக்கிறான். மாங்காய், அண்ணாச்சி பழம், கடலை, பட்டாணி போன்றவைகளை விற்கக் கூடியவர்களில் சிலருக்கு வணிகத்திற்கான லாபமும் கைகூடி இருப்பதை பார்க்க முடியும். சில வண்டி கடைக்காரர்கள் அணிந்துள்ள தொப்பிகளில் அதீத வசீகரம் வெளிப்படுவதுண்டு. தொப்பிகள் என்றவுடனே ஒருவரின் புலம்பல் தானாக காதுக்குள் கேட்கிறது. டூரிஸ்ட் பஸ்களில் உட்காரும் சீட்டுகளும் கைப்பிடிமானங்களும் முக்கியத்துவம் வாய்ந்தது. பலர் கம்பியைப் பிடித்து பேருந்துகளில் நிற்கத் தெரியாமல் விழுந்து அடிபட்டு ஆனந்தப்படும் நிகழ்ச்சிகளை கேட்கும் போதெல்லாம் சத்தம் போட்டு சிரித்திருக்கிறேன். இதனாலேயே உட்கார இடம் இருந்தால் மட்டுமே பேருந்தில் ஏறுவேன் என்ற கொள்கைகளை சிலர் வைத்திருக்கின்றனர். டூரிஸ்ட் பஸ்களில் உட்காரும் இடத்தில் முகத்திற்கு முன்னே கைப்பிடிகள் இருக்கும். அந்த கைப்பிடிகள் பல வகைகளில் பயன்படக்கூடியது. துண்டுகளையும் கைக்குட்டைகளையும் காய போடுவதற்கும் சிப்ஸ் பாக்கெட்டுகளை செருகுவதற்கும் அவை உதவும். அந்த கைப்பிடிக்குள் தொப்பியை சுருட்டி வைத்துவிட்டு தொப்பியை தொலைத்து விட்டேன் என புலம்பும்போது பார்ப்பதற்கே பயங்கர வேடிக்கையாக இருக்கும். தொப்பிகளுக்குப் பின் சில கதைகள் உண்டு. 


      மழை நேரங்களில் நனைவது எல்லோருக்கும் பிடித்தமான விஷயமாக இருந்தாலும் சில நேரங்களில் மழை லேசான கடுப்பை உண்டு பண்ணிவிடுகிறது. அப்படியான சமயங்களில் தலையில் விழுந்து தாடி வலியை தண்ணீர் வலியும்போது தொப்பி அணிந்தவர்கள் எதிரிகளாகவே எதிரில் நின்றுகொண்டிருப்பார்கள். எதிரியின் ஆயுதம் கீழே விழும்போது அவனை எளிதில் வீழ்த்தி விடலாம் என்ற உத்வேகம் வீரர்களுக்கு வருவது இயல்பானது. தொப்பிகளும் தொலைதல்களும் எல்லா பயணங்களிலும் சிறப்பானதொரு அங்கம். அத்துடன் பனியன்களை மாற்றுவதும் ஜட்டிகளை மாற்றுவதும் சாதாரணமாக பயணங்கள் இடையே நடக்கும். ஒரே மாதிரியான சட்டைகள், பேண்டுகள் என்றால் எதையும் சொல்லவே தேவையில்லை கட்டாயம் அவை அங்கொன்றும் இங்கொன்றுமாக மாறி இருக்கும். பலருக்கு துணிகள் மாறுவதும் பின்னர் தேடுவதும் பயணத்தின் ஒரு நிலையாகவே இன்றளவும் நிலையாகத் தொடர்கிறது. ஒரே கலர் பேண்டாக இருந்தாலும் பிராண்டுகள் வேறு வேறாக இருப்பதால் விலை உயர்ந்த தரமான துணிகள் மாறக்கூடிய வாய்ப்புகள் தொன்னூறு சதவிகிதத்தில் நிகழ்கிறது. செருப்பினை கோவிலில் மாற்றி போடுவது போன்றது தான் இத்தகைய சம்பவங்கள். சீட்டுகளுக்கு அடியில் செருப்பை போட்டு விட்டுத் தேடுவதும் கோயில் நோக்கிய பயணங்களாக இருந்தால் செருப்பை கழற்றி போட்ட இடத்தை காணும் என தேடுவார்கள், செருப்பைக் காணவில்லை என்று தேட மாட்டார்கள். இப்படியான தேடல்களும் தமிழ் சமூகத்திற்கு பழக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது‌. ஒரு செருப்பை பல வருடங்களாக அணியும் நபர்களுக்கு இதில் பெரிய அளவில் இழப்பு இருப்பதில்லை. புதிய செருப்புகளை ஐந்து ஆறு கடைகள் ஏறி இறங்கி கூட இருப்பவர்களிடம் நன்றாக இருக்கிறதா? அழகாக இருக்கிறதா? இவ்வளவு விலைத் தகுமா? என்று அடுக்கடுக்கான கேள்விகளை வைத்து வாங்கப்பட்ட செருப்பாக இருந்தால் அவர்களுக்கு ஐயோ! இன்னும் சிலர் உண்டு அவர்கள் அபூர்வ பிறவிகள். கண்கள் முகத்தில் இருக்காது. பிடரியின் பக்கமோ தலை உச்சியிலோ இருக்கும். கீழே பார்த்து நடக்காமல் கல்லின் மேல் போய்விழுவார்கள் அல்லது கண்டதையும் மிதித்து விட்டு வீச்சத்துடன் வருவார்கள். இதெல்லாம் செருப்பை மையமாகக் கொண்ட சில பயண வாய்ப்புகள். இப்படியாகத்தான் பயணங்கள் அமைகின்றன இவைகள் எல்லாம் இருந்தால்தான் பயணங்களும் பூரணப்படுகின்றன.


      அவன் இன்னும் அந்த இடத்தில் சந்துரு வருவதற்காக நின்று கொண்டிருந்தபோது அந்தப் பெண்கள் கூட்டமும் வரவேண்டியவர்கள் வந்தவுடன் மெதுவாக கலைந்து சென்றனர். அவர்கள் கலைந்ததற்கு ஒரு நிமிடத்திற்கு பின் சந்துரு வண்டியில் வந்தார். இளம் ரோஸ் கலர் உடைகள் ஃபார்மலுக்கான அடையாளம். ஒரு கல்லூரி விழாவிற்கோ அல்லது நேர்முகத் தேர்வுகளுக்கோ செல்வதற்கு ஏற்ற உடையாக இளம் ரோஸ் கலர் நிறம் இருக்கிறது. அந்த சட்டையைத் தொடர்ந்து பராமரிப்பதற்கு பெரும் சிரமம் மேற்கொள்ள வேண்டும். வெளுத்து விட்டால் சட்டையின் நிறமே பார்ப்பதற்கு வித்தியாசமாகிவிடும். சட்டையும் கைப்பகுதியும் தோள்பட்டை பகுதிகளும் வெளுத்த பிறகு உடலின் முன் பின் பகுதிகள் கொஞ்சம் டார்க்காக இருந்தால் பார்மல் என்கிற போக்கையே அந்த சட்டை மாற்றி விடும். அந்த நாளில் சந்துரு இளம் ரோஸ் நிற உடையை அணிந்திருந்ததால் இந்த தகவலை எல்லாம் சொல்ல வேண்டியிருக்கிறது.  அவர் அணிந்திருந்த சட்டையில் பழுப்பு நிற அழுக்கு கோடுகள் குறுக்கு மறுக்காக பாய்ந்திருந்தது. பொதுவாகவே சந்துருவின் உடல்வாகு வியர்வை சுரப்பிகளின் தீவிரமான சுரப்பு நிலையைக் கொண்டது. விரைவில் வியர்த்து விடக்கூடிய அவர் அதிக அழுத்தங்கள் நிறைந்த ஒருங்கிணைப்பு சார்ந்த வேலைகள் செய்தால் வியர்வை வராமல் இருக்குமா என்ன? சந்துரு ஒரு பகுதி நேர நடன ஆசிரியரும் கூட. நடனமாடும் போது கைகளினே முருக்கி குனிந்த வாக்கில் முன்னே ஒரு அசைவும் ஐந்து விரல்களையும் விரித்துக்கொண்டு பக்கவாட்டில் இரண்டு முறை ஆட்டிவிட்டு அப்படியே குறுக்குவெட்டில் தலைக்கு மேல் பிணையல் நிலையில் அதே போல இரண்டு முறை அசைப்பதும் அவருடைய தனிப்பாணி நடன அசைவு. அந்த நடன அசைவினை அவர் செய்யும் போது முகத்தில் ஒரு தேஜஸ் இருக்கும். தொப்பை முழுமையாக ஏறி இறங்கும். வாய் ஏதோ ஒன்றை சொல்ல முயலுமாறு முணுமுணுப்பதற்கு தயாராக இருக்கும். ‌ஆனால் உதடுகள் அசையாது. அந்த நடன அசைவு அவருக்கு தேவைப்படும் அளவிலான புகழை அள்ளித் தந்துள்ளது. இப்படியான ஒரு நடனமாடும் நபருக்கு நடனத்தின் போது அதிகம் வியர்ப்பதை பலமுறை பார்த்ததுண்டு. அன்றைய நாளில் அவர் அதிக வேலைகளையும் பொறுப்புகளையும் தன் தோளின் மீது சுமந்ததன் அடையாளத்துக்குரிய சாட்சியாக அவர்கள் சட்டைகள் நடந்திருந்தன. முகத்தில் ஒரு வேகமும் துடிப்பும் அத்துடன் சேர்ந்த படபடப்பான களைப்பும் இருந்ததை பார்க்கும்போது அவரது தலைமைத்துவ ஆளுமை கைகளில் ஒட்டி இருந்த வியர்வை துளிகளுக்குள் மின்னியது. வண்டியில் ஏறியதும் வண்டி வேகமாக ஒரு சந்தைக்குள் போய் நின்றது அங்கு எந்த பயன்பாட்டுக்கும் உதவாத ஒரு ஓலைக் கூடையையும் தக்காளி மூட்டையையும் எடுத்துக்கொண்டு இவன் சந்துருவுக்கு பின்னே ஏறினான். வண்டி போய் நின்ற இடத்தில் வண்டியை ஒட்டி வந்து நின்ற ஒரு ஆட்டோவில் கனமான சப்பாத்திக் கல்லும் அதற்கு ஏற்ற கேஸ் அடுப்பும் வேறு சில சின்ன சின்ன மூட்டைகளும் இருந்தது. இவன் அதனை நோக்கி இறக்குவதற்கு செல்லும் சமயத்தில் தம்பிய சி.எஸ்.கே என்று ஒரு சத்தம் கேட்டது. இரண்டாவது முறை அதே சத்தம் கொஞ்சம் வலுவாக காதுக்குள் இறங்கியதும் பழக்கப்பட்ட சத்தமாக இருக்கிறது நம்மைத்தான் அழைக்கிறார்கள் என்ற உணர்வில் யார் என்று சுற்றி பார்க்கும் போது டார்க் கலர் முழு நீள டீசர்ட்டும் ப்ராப்ளம் உள்ள பேண்டும் போட்டுக் கொண்டு தர்மசீலன் முகம் நிறைய பல் தெரிய தம்பி‌… என நின்று கொண்டிருந்தார். ஆளும் பேருமாக எல்லா பொருட்களையும் விலக்கி பேரிக்கார்டுக்குப் பின்னே போட்டனர். அந்த பேரிகார்ட் அவ்வளவு எளிதில் மறக்க கூடியது அல்ல.‌ ”

“ஹான் சொல்லு" என ஒவ்வொரு முறையும் கேட்கக்கூடியது. இவனைச் சேர்த்து சந்துரு தர்மசீலன் அடக்கமாக மூன்று பேர் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துக் கொண்டிருந்தனர். இதே வேலையைத்தான் இன்னும் இரண்டு நாட்களுக்கும் செய்ய வேண்டுமா என்ற மெல்லிய கேள்வி இவனுக்குள் ஓடியதைப் போன்று தான் அவனுடன் இருந்தவர்களுக்குள்ளும் ஓடியிருக்கும். ஏனென்றால், அந்தச் சூழல் அப்படி நினைக்க உந்தும் வகையில் காணப்பட்டது. இவனுக்குப் பொருட்களை இறக்கியதோடு சேர்த்து இரண்டு கேள்விகள் இருந்தன. ஒன்று தர்மசீலன் எப்போது வந்தார்? பொருட்களை எல்லாம் இறக்கி முடித்து விட்டோம் சமையல் மாஸ்டர் எப்போது வருவார்? என்பதே அந்த இரண்டு கேள்விகள். தர்மசீலன் மாலை நேரம் வந்ததும் சமையல் மாஸ்டர் வந்து அவருடைய பையை வைத்துவிட்டு பத்து மணிக்கு வந்து விடுவதாக ஒரு உறுதிபூர்வமான தகவல்களை சொல்லியதாக தர்மசீலனே கூறினார்.


        அந்த நேரத்தில் பொழுது போக வேண்டும் என்பதால் மீண்டும் பூவரசனுக்கு போன் சென்றது. அவர் பஸ் ஸ்டாண்டில் நிற்பதாக சொன்னார். கொஞ்ச நேரம் பேசியதற்கு பின்பு பயங்கரமான பசியில் இருந்த இருவருக்கும் சால்னாவையும் புரோட்டோவையும் ஒரே சட்டியில் போட்டு புரட்டி இலையில் போட்டார்கள். பின்பு முட்டைகள் அடுத்து இட்லி, கல் தோசை சகிதமாக அன்றைய இரவு சாப்பாடு முடிவு நோக்கி வயிற்றுக்குள் இறங்கிக் கொண்டிருந்தது. அவன் ஏற்கனவே சாப்பிட்டு வந்ததால் எதுவும் சாப்பிடவில்லை. தண்ணீர் மற்றும் குடித்துவிட்டு உட்கார்ந்திருந்தான். அவன் குடித்த ஒரு கிளாஸ் தண்ணீரைச் சேர்த்து மூன்று பேருடைய பேரிலும் 150 ரூபாய்க்கான பில் போடப்பட்டு விட்டது. அந்த நேரத்தில் பூவரசனிடம் இருந்து போன் அவருக்கு காளிமார்க் போவோண்டா குடிக்க வேண்டுமாம் அதை வாங்கிவிட்டு வண்டி ஏறச் சொன்னார். எங்கிருக்கிறீர்கள்? என்று கேட்டதற்கு மறுபடியும் பஸ் ஸ்டாண்டில் இருக்கிறேன் என்ற அதே பதில். அவர் அதே கேள்வியை திருப்பி கேட்டதற்கு ரோட்டில் இருக்கிறேன் என்ற அவனது பதிலும் மாறி மாறி இருவர்களுக்குள்ளும் உதிர்ந்தன. 


      நேரம் கொஞ்சம் கொஞ்சமாக கடக்கும் சமயத்தில் தான் விட்டுப்போனவை எல்லாம் நினைவுக்கு வரும். அப்படியானதொரு ஞாபகம் அன்றைக்கு தர்மசீலனிடம் இருந்து வந்தது. உப்பு இல்லாத பண்டம் குப்பைக்கு என சொல்வார்கள். உப்புக்காகவும் உப்புக்கான வரியை எதிர்த்தும் சத்தியாகிரக யாத்திரை சென்ற பல வரலாறும் வளமையும் கொண்ட இந்த மண்ணின் பெருமையைக் காப்பாற்றிய உற்சாகம் அவர் உப்பு வாங்கலயா நண்பா என்று சொல்லியதில் தெரிந்தது. பின்பு பலசரக்கு வாங்கிய ரசீதுகளில் உப்பு என்ற வார்த்தை இருக்கிறதா? என பார்த்துவிட்டு அதை வாங்க சென்றனர். அத்துடன் சூடமும் பத்தியும் வாங்கி வந்தனர். காளான் வாங்க வேண்டிய வேலையும் அந்த நேரத்தில் மிச்சமிருந்தது. சந்துரு அந்த வேலையை தனக்கானதாக எடுத்துக் கொண்ட நேரத்தில் இட்லி மாவும் வாங்க வேண்டி இருந்தது. தர்மசீலனும் சந்துருவும் இட்லி மாவு வாங்கிவிட்டு வந்தனர். இந்த உப்பு யோசனை உதித்த இடமும் மாவு வாங்க கிளம்பிய நேரம் தான். பின்பு ஐ.பி.எல் போட்டியை சன் ஷோரூமுக்கு சென்று சாலையில் நின்றவாறு கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு மீண்டும் பொருட்கள் இருக்கும் இடத்திற்கு வந்தாயிற்று. காளானை வாங்கியதோடு வாங்க வேண்டிய பொருட்களை எல்லாம் வாங்கி முடித்தாயிற்று. நேரமும் சரியாக நெருங்கிக் கொண்டிருந்தது. காளான் பெட்டியை பிரிட்ஜில் வைப்பதற்கு எங்களுக்கு முன்னே செல்லும் கல்லூரி பேருந்தில் கொடுக்க வேண்டிய வேலையும் பூவரசனுக்கு பொவோண்டா வாங்க வேண்டிய வேலையும் மட்டுமே மிச்சம். பஸ்ஸை கல்லூரி நோக்கி எடுக்க தயாராகியும் சிலர் வந்து சேரவில்லை. சரியான நேரத்திற்கு வருகிறேன் என மதியம் சொன்னவர்கள், இறுதி நேரத்தில் இரண்டு மூன்று பைகளில் துணிகளோடு இவன் காளான் பெட்டியை பேருந்தில் கொடுத்து விட்டு இறங்கும் நேரத்தில் ஏறியவர்கள் என பலர் அந்த வண்டிக்குள் இருந்தனர். எல்லோரும் வந்த பிறகு சம்பிரதாயமான டாட்டாக்களோடு வண்டி கிளம்பி சென்றது. கார்த்திக் இன்னும் வரவில்லை கேட்டதற்கு புது பஸ் ஸ்டாண்டில் இருக்கிறேன் என்கிறான். அவன் வருவதற்குரிய இடைவெளியில் பூவரசனுக்கு வாங்க வேண்டிய பொவோண்டாவை மறக்காமல் கடையில் போய் கேட்டால் கடைக்காரர் பொவோண்டா இல்லை, டிலோ தான் இருக்கிறது என்கிறார். பிறகு என்ன செய்வது என அதை வாங்கிக் கொண்டு எண்ணெய் பாக்கெட்டுகளை ஐந்து, ஆறு, ஏழு என ஏலம் ஏற்றுவது போல ஏற்றி பத்து என்ற எண்ணிக்கைக்கு ஏற்க்ஷ பாக்கெட்டுகளையும் சோப்பு, பற்பசை முதலான தன் சுத்த உபகரணங்களையும் வாங்கி விட்டு திருவில்லிபுத்தூர் ஆர்.சி சர்ச் விலக்கில் மூடியிருந்த கடைக்கு வெளியே குத்தவைத்து உட்காரும்போது மணி சுமார் 10:20 இருந்திருக்கலாம். பகல் நேரத்தில் பரபரப்பாக இருக்கும் அந்த இடத்தில் அப்படி உட்கார்ந்து இருப்பதற்கான வாய்ப்புகள் துளியும் கிடையாது. அது இரவு நேரம் என்பதால் அங்கே உட்கார்ந்து அவனும் தர்மசீலனும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது கார்த்தியும் வந்து சேர்ந்தான். மூன்று பேரும் நடுரோட்டில் நடந்து சமையல் பொருட்கள் இருக்கும் இடம் நோக்கி நகரத் தொடங்கினர். 


      தர்மசீலன் தனது வயதுக்கேற்றபடி பூமராக மாறிய கணமும் அப்போதுதான் வந்தது. ஓரமா போங்கடா எதிரில் வண்டி வரும் போது லைட் அடித்தால் பின்னாடி வரும் வண்டிக்கு நம்ம நடந்து போவது தெரியாது என திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே வந்தார். அதில் இவனுங்க அடிபட்டு கீழே விழுந்தால் சுற்றுலாவுக்கு கிளம்ப தாமதமாகிவிடும் என்ற சுயநல நோக்கமும் இருந்தது. பொருட்கள் குவிந்திருந்த இடத்திற்கு அவர்கள் மூவரும் சென்ற நேரத்தில் சமையல்காரர் வந்திருக்க வேண்டும். ஆனால் என்ன பிரச்சனையோ அவர் இன்னும் வரவில்லை. அவனும் ஏற்கனவே மூன்று முறை சமையல் மாஸ்டருக்கு போன் அடித்து விட்டான். சந்துருவும் அதிக முறை போன் அடித்துவிட்டார். அப்படியிருந்தும் எதிர்பார்க்கக்கூடிய சாதகமான பதில் கிடைக்கவே இல்லை. சமையல்காரர் இல்லாமல் கண்டிப்பாக போக முடியாது. காய்கறிகள், அடுப்பு, பலசரக்குகள் என்று சமையலுக்குத் தேவைப்படும் சகல பொருட்களையும் வாங்கி ரோட்டில் அடுக்கி வைத்தாயிற்று. அவற்றை சரியான முறையில் பயன்படுத்த சமையல் மாஸ்டர் அவசியம். சமையல் மாஸ்டர் இல்லாத பட்சத்தில் சந்துருவையும் தர்மாவையும் சமைக்க விட்டுவிடலாமா என யோசிக்கும் அளவுக்கு நிலைமை உச்சக்கட்டத்தை நோக்கி ஏறிக் கொண்டிருக்கிறது. இவ்வளவு நேரம் அவர்கள் யாரை சமையல் மாஸ்டர் என்று நினைத்தார்களோ அவர் சமையல் மாஸ்டர் இல்லை என்ற ஒரு தகவல் புதிதாக கிடைத்தது. அவர் தன்னை ஒரு தேர்ந்த சமையல் மாஸ்டராக அன்றைய தினம் காலையில் காட்டிவிட்டுச் சென்றிருந்தார். அவருடன் இருந்த வயதானவர் தான் சமையல் மாஸ்டர் என்று அப்போதுதான் தெரிய வந்தது. சரி நமக்குத் தேவை ஒரு சமையல் மாஸ்டர் என்ற முடிவுக்கு வந்து சேர்ந்திருந்த போது நிகழ்ந்த சம்பவம் அங்கிருந்த புதிதாக வந்து சேர்ந்த கார்த்திக்குடன் நான்கு பேருக்கும் கொஞ்சம் பதற்றத்தை காட்டியது. பையை வைத்துவிட்டு போன அவரை அவரது வீட்டில் ஹவுஸ் அரெஸ்ட் செய்து விட்டார்கள் என்றனர். என்ன காரணம் என்று கேட்டபோது புதிய புதிய விசித்திரமான தகவல்கள் அந்த சாலையில் கொட்டியது. அவர் மீது இரண்டு சைக்கிள் திருட்டு வழக்குகள் இருப்பதாகவும் அந்த வழக்குக்கான வாய்தாவிற்கு பலமுறை செல்லாததால் அதிக நெருக்கடி சாட்சிக் கையெழுத்து போட்டவர்கள் மீது வந்ததாகவும் சொன்னார்கள். எங்கோ ஓரிடத்தில் குடித்துவிட்டு இவர் படுத்திருக்கும் போது அங்கிருந்த சைக்கிள் காணாமல் போயிருக்கிறது. சிசிடிவி கேமராவில் இவரது முகத்துடன் ஆன உடல் பதிவானதால் போலிஸ் அதிகாரிகள் அவர்களது பாணியிலான விசாரணையை நடத்தியதில் விசாரணையின் தீவிரம் தாங்காமல் குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டதாகவும் இதே போன்ற நடைமுறையை இரண்டு வழக்குகளிலும் இருப்பதாகவும் இந்த மாதிரியான வழக்குகளில் அவர் சிக்கிக் கொள்வதற்கு கூட இருந்த மற்றொரு சமையல்காரர் தான் காரணம் என்றும் அங்கிருந்த பலர் தங்கள் தங்கள் தரப்பில் நின்று கொண்டு வாத பிரதிவாதங்களை காமராசரின் முன்னிலையில்…  இல்லை இல்லை தவறாக நினைத்து விட வேண்டாம் காமராசர் சிலையின் முன்னிலையில் நிகழ்த்தினர். இந்த வழக்கும் வாய்தாவும் வாதங்களும் குதித்து குதித்து கத்திப்பேசும் சமையல்காரரின் சொற்களும் அவர்கள் நான்கு பேருக்கும் தேவையில்லை. வேடிக்கைப்பார்க்கும் நிலையை மாற்றும் வகையில் பூவரசனின் போன் அழைப்பு இருந்தது. அதுவரை பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்த பூவரசன் கல்லூரிக்கு வந்திருந்ததால் மீதி இருந்த நான்கு பேரையும் காணவில்லை என்று அவனுக்கு போன் போட்டார். அவன் பூவரசனிடம் பேசி நிலவரம் சொன்ன பின்பு மற்றொரு ஃபோனும் அவனுக்கு வந்தது. மறுபடியும் பூவரசனிடம் இருந்து போன் அதை எடுக்க முடியாத நிலையில் ஐ வில் கால் யு பேக் என ஒரு மெசேஜை தட்டி விட்டதற்கு பதில் மெசேஜ் ஆக அவர் போடா *** என ஒரு மெசேஜை அவனுக்கு அனுப்பி இருந்தார்.


       இப்படியான நிலைமையில் தர்மசீலனின் வாயிலிருந்து முத்து போன்ற விலை மதிக்க முடியாத வார்த்தைகள் காதுகளுக்கு காட்டப்பட்டது. சந்துருவுக்கு எப்படி இவர்களை எல்லாம் வைத்து நாங்கள் சமாளிக்க போகிறோம் என்று புதியதொரு கவலை தோய்ந்த சிந்தனை கோபம் கலந்து வெளிப்பட்டது. அந்த நேரத்தில் வேறு சிலரை சமையல் உதவிக்கு தொடர்பு கொண்டு பார்த்தால் அவர்கள் எல்லாம் வேலை இருக்கிறது என கை விரித்து விட்டனர். கை விரித்து என்ன பயன் விரிந்த விரிந்து கிடந்த கைக்குள் எதுவும் சிக்கவில்லையே. உடனே ஹோட்டல் கார அண்ணன் தனது கடையில் வேலை பார்ப்பவரை உடன் அனுப்பலாம் என்ற முடிவுக்கு வந்தார். சில வாய்ப்புகளைத் தேடி வந்து சேர்ந்த நேரமும் ஹோட்டல் மூடும் நேரமும் சரியாக இருந்தது. உடனே இவன் அந்த அண்ணன் அனுப்பிய ஆளை ஆயத்தமாக்கிக் கூட்டி வரச் சென்றான். அப்போது அவர் தனக்கு வரும் வாய்ப்பு இல்லை என்றும் வேறொருவரை அனுப்புகிறேன் என்றும் அனுப்ப முயற்சித்தார். அவன் நின்று கொண்டிருந்த நேரத்தில் மருந்து குடித்துவிட்டு கையில் பொட்டலத்துடன் வந்த ஒருவர் அவனிடம் யார் வேண்டும் இந்த நேரத்தில் எதற்கு இங்கே நிற்கிறீர்கள் என்று தெளிவான கேள்விகளை தெளிவற்ற முறையில் வெளித் தள்ளினார். அவரிடம் சொல்ல வேண்டிய பதிலை நான்கு முதல் ஆறு வார்த்தைகளுக்குள் இவன் சொல்லி முடித்த பின் தம்பி நீ சாப்பிட்டாயா? சாப்பிடுகிறாயா? என கையில் இருந்த பொட்டலத்தை நீட்டினார். அவரை சமாளித்தால் வண்டிக்கு பின்னே வேறொருவர் ஏறினார். அவரை ஹோட்டலுக்கு கூட்டி போ தம்பி என்று அந்த ஹோட்டலில் வேலை பார்க்கும் அண்ணன் சொன்னார். பின்பு அவரை கூட்டிப் போய் இறக்கிவிட்டு அவன் தர்மசீலன் சந்துருவோடு சேர்ந்து வரவு செலவு கணக்குகளைப் பார்க்க ஆரம்பித்தான். கார்த்திக்கும் அப்போது உடனிருந்தான். அந்த நேரத்தில் தான் சுற்றுலாவுக்கு பதிவு செய்திருந்த வண்டி இராஜபாளையம் நோக்கிச் சென்றது‌. இதனை தர்மசீலன் பார்த்தவுடன் இந்த பஸ் எப்போது திரும்பி வர நாம் எப்போது போக என்று மறுபடியும் புலம்ப ஆரம்பித்துவிட்டார். அவருக்குத் தான் டூர் மீது அதிக அக்கறையும் ஆர்வமும் அதனால் எடுத்ததற்கெல்லாம் புலம்பிக் கொண்டுதான் இருந்தார். சந்துரு டிரைவருக்கு போன் போடும்போது பஸ் எடுத்தாச்சு வந்துக் கொண்டிருக்கிறோம் என்றார். அதற்குப் பின் அந்த வண்டி போய் திரும்பி வந்தது. பின்பு எல்லாவற்றையும் சேர்த்து பொருட்களை எல்லாம் வண்டியில் ஏற்றிவிட்டு மறக்காமல் இட்லி மாவை மட்டும் ஏற்றாமல் கடையிலேயே வைத்துவிட்டு கிளம்பியாயிற்று. பஸ்ஸில் கல்லூரிக்கு போகும் வழியில் மாவின் ஞாபகம் வரவும் சந்துரு தன் தம்பியிடமும் ஹோட்டல்கார அண்ணனிடமும் போன் போட்டு மாவை கொண்டு வரச் சொல்லி மறுபடியும் ஏற்பாடுகளை துரிதப்படுத்தினார்.


       வண்டியை கொண்டு வந்து கல்லூரி வாசலில் நிறுத்திய பின்பு எல்லோரும் ஏற ஆரம்பித்தனர். பின்பு கல்லூரி பேனர் எடுத்து அவன் டூர் பஸ்சுக்கு பின்னே கட்ட ஆரம்பித்தான். பூவரசன் தட்டு, டம்ளர் உள்ளிட்ட எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு வந்து வண்டிக்குள் ஏற்றினார். அத்துடன் ஏற்கனவே கொடுத்திருந்த காளான் பெட்டியும் வந்தது. பின்பு எல்லோரையும் ஏற்றிவிட்டு எலுமிச்சை, தேங்காய், சூடம் எல்லாம் வைத்து வழக்கமான சம்பிரதாயங்களுடன் வண்டியை எடுத்தனர். வண்டியை எடுப்பதற்கு முன்பே இவ்வளவு சம்பவங்கள் நடந்து விட்டது. 


       போகும் வழியில் மாவை வாங்கிய பின்பு அதனை வண்டியில் பின்னாடி ஏற்றுவதா? அல்லது முன்னாடி வைப்பதா? என்று ஒரு சிறு உரசல். உரசல்கள் எல்லாம் ஓய்ந்து வண்டியும் புறப்பட்டது. வண்டி புறப்பட்டவுடனே இடமாறுதல்கள் தன்னிச்சையாக நிகழ்ந்தன. பாடல்களை ஒலிக்க விடுவதற்குரிய பொறுப்பும் பாடல்களை தேர்வு செய்ததும் பூவரசன் தான். பாடல்கள் நிரம்பிய பென்ட்ரைவையும் அவர் வசமே வைத்திருந்தார். அதனை தேடிப்பிடித்து செருகி பாடல்களை போட்டவுடன் எல்லோரும் அமைதியாக இருந்தனர். அவனும் தர்மாவும் திடு திடுவென ஓடி ஆடத் தொடங்கியதும் பூவரசனும் சந்துருவும் இணைந்து கொண்டனர். தொடர்ந்து பெண்கள் ஆட வந்ததும் பஸ்ஸில் ஆடுவதற்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டு விட்டது. இருப்பினும் எல்லோரும் மகிழ்ச்சியாக அந்தப் பொழுதை மாற்றுவதில் கவனம் கொண்டிருந்தனர். இறுக்கம் படிப்படியாக அறுபடத் தொடங்கிய தருணமாக ஆடிய நேரத்தை சொல்லலாம். தொடர்ந்து ஆட்டத்தின் நடுவே சிறு பையன்களும் இணைந்து கொண்டனர். அப்போது நடனத்திற்குரிய உடல் அசைவுகளை மாற்றி மாற்றி படியில் நின்று கொண்டு சந்துரு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அவனும் பூவரசனும் ஜோடி போட்டு ஆடிக் கொண்டிருந்தனர்‌ தர்மசீலனும் திடீரென ஓடி ஓடி ஆடிக் கொண்டிருந்தார். சந்துருவிற்கு மீண்டும் வியர்வை வர ஆரம்பிக்கும் வேளையில் எல்லோருக்கும் அடுத்தடுத்து வியர்த்தது.  வண்டியும் தொடர் ஓட்டத்திலேயே இருந்தது. நேரம் ஆக ஆக நடன அசைவுகளுக்கு பஞ்சம் ஏற்பட்டது. ஏற்கனவே ஆடிய அசைவுகளை எவ்வளவு நேரம் தான் மாற்றி மாற்றி போட முடியும் என நின்று கொண்டிருந்த நேரத்தில் சார் குங்ஃபூ ஸ்டைல் நடனத்தை அந்த இடத்திற்கு அறிமுகம் செய்து வைத்தார். உடனே ஆடிக் கொண்டிருந்த நால்வரும் அந்த குங்ஃபூ ஸ்டைலை பிடித்துக் கொண்டு தலையை கோணலாக வைத்து கைகளை ஐந்து ஆறு முறை மடக்கி நீட்டினர். இப்படியாக பயணம் ஓடியது. நேரம் ஆக ஆக ஒவ்வொருவராக சென்று உறங்கும் தொழிலுக்குச் சென்றனர். வண்டி ஓடிக்கொண்டிருந்த நேரத்தில் அதிகாலை பொழுது நெருங்கும்போது குளிர் உள்ளிருந்த குறிப்பாக ஜன்னலோரம் இருந்தவர்களை தொற்றிக் கொண்டது. இப்படியாக கன்னியாகுமரிக்கு சூரிய உதயத்தை பார்க்க சென்றனர். சூரியன் உதயம் ஆகிய பின்பு அங்கு இறங்கினர். இறங்கியதும் கடன்களை செலுத்த வேண்டிய கடமை இருந்ததால் வெஸ்டர்ன் ஸ்டைல் டாய்லெட்டுகளை தேடத் தொடங்கி தர்மசீலன் போனார். அந்த நேரத்தில் தேடலை மறக்கச் செய்தது கடல். கடலுக்குள் தன்னை தேடும் அடுத்த பயணம் ஆரம்பமானது. எல்லோரும் கடலை நோக்கி ஓடினர். அப்போது அனைவரும் சேர்ந்து ஆசிரியர்களுடன் போட்டோ எடுத்துவிட்டு கடலுக்குள் இறங்கும்போது, சூரியன் ஒரு லாரி உயரத்தில் மேலே ஏறி நின்றது. அதன் சிவப்பு நிறத்தை மேகம் போர்த்த நினைத்து முடியாமல் தவிக்க மேகத்தின் தவிப்பை தள்ளித்தள்ளி விலக்கும் செயல்பாடு தொடர்ந்தது. மேகம் மற்றும் சூரியனுக்கு இடையே இந்த மோதல் படிப்படியாகத் தொடர சூரியன் வெற்றியின் பக்கம் முன்னேறி நகர்ந்தது. அதன் வெற்றியை முழுமையாக பார்க்கும் வாய்ப்பினை காலமும் வானிலையும் வழங்கவில்லை. திருவள்ளுவர் தினமும் எப்படி இந்த சூரிய உதய சண்டை காட்சிகளை பார்த்துக்கொண்டு அமைதியாக நின்று கொண்டிருக்கிறாரோ என்ற எண்ணம் அவனுக்கு அப்போது தான் ஏற்பட்டது.


      இதற்குப் பின்னான நிகழ்வுகள் பெரிய அளவில் நினைவில் நீங்காமல் இருக்குமளவு உணர்வு பிணைப்பிற்கும் உணர்வுருவாக்கத்திற்கும் அடிப்படையாக அமைந்தவை. கல்லூரி சுற்றுலாக்கள் நடத்தப்படுவதன் காரணத்தை பூர்த்தி செய்வதும் கூட. ஒன்றரை வருடங்கள் ஒன்றாக படிக்கும்போது பேசிக் கொள்ளாதவர்கள் எல்லாம் பேசுவதற்கான சூழலையும் புதிய உறவுகளின் நட்பையும் உயிருடனான பிணைப்பையும் பின் தொடரும் மென் காற்றாக இதத்தை ஒரு பகுதியிலும் பிரிவெனும் சூறைக்காற்றாக அச்சத்தையும் ஏற்படுத்தி நகர்ந்தவை. இதற்கு முன் எழுதப்பட்டிருப்பவை மே மாதத்தின் தொடக்கப்பகுதியில் எழுதியது. சோம்பேறித்தனத்தாலோ அல்லது வேறு சில காரணங்களாலோ முழுமையாக எழுதி முடிக்கப்படவில்லை. நான்கு மாதங்கள் முழுமையாக முடிவடைந்த பின்பு செப்டம்பர் மாத தொடக்கத்தில் இந்த பகுதியிலிருந்து இதை தொடர்கிறேன். இதை மறு தொடக்கமாக கூட எடுத்துக் கொள்ளலாம். இந்த நேரத்தில் முடிந்த வரை அதிகமாக முன் பகுதியைப் போன்று விவரணைகள் இல்லாமல் மிகச் சுருக்கமாக முடித்து விட வேண்டுமென நினைத்தே இதனை இன்று தொடங்கியுள்ளேன். திருவள்ளுவர் பாவம் நான்கு மாதங்கள் நமக்காக அந்த இடத்திலேயே நின்று கொண்டிருக்கிறார்‌. அவரைக் கொஞ்சம் கவனித்து விட்டு அடுத்த பக்கம் நோக்கி நகர்வோம்.


      இதமான வெயிலற்ற காற்றின் நுனியில் கடல் அலைகள் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்ரோச பட தொடங்கியிருந்த அந்த வேலையில் கடலுக்கு மேல் ஓரத்தில் கொஞ்சம் உள் தள்ளி நின்ற அவன் தனது மொபைல் நனைந்து விடக்கூடாது என பேண்ட் பாக்கெட்டில் இருந்து எடுத்து கண்டக்டர் போல ஹேண்ட் பேக் ஒன்றைத் தோளில் தொங்கவிட்டுக் கொண்டே கடலுக்கருகில் வந்த தேசிகாவிடம் கொடுத்தான். பின்பு மேடத்தின் மகளுடன் அவன் விளையாடிக் கொண்டிருந்தான்‌. அலை கொஞ்சம் கொஞ்சமாக தீவிரப்பட்ட நேரத்தில் ஒருவர் கீழே விழுந்தார். விழுந்ததில் அவர் அணிந்திருந்த கண் கண்ணாடி கடலோடு அடித்துச் செல்லப்பட்டு விட்டது. அதன் பின்பு தான் முந்தைய இரவில் யோசித்த பிரச்சனைகள் தொடங்க ஆரம்பித்தன. பிரச்சனை என்றால் தர்மா, சந்துரு, பூவரசன் மூன்று பேரும் சட்டையைக் கிழித்து சண்டை போடுவார்கள் என்று யாரும் நினைத்து விட வேண்டாம். நான் சொல்வது சாப்பாடு பிரச்சனை. ஆரம்பத்தில் மிக்சியை தூக்கிக்கொண்டு சந்துருவும் பூவரசனும் ஓடியதிலிருந்து கடைசி நாளில் மின்கம்பத்தின் கீழே ஊறும் எறும்புகளின் நடுவே ஒரே தட்டில் அவனும் பூவரசனும் உப்புமா தின்றது வரை சாப்பாடு வேலைகள் அவர்களுக்கு இருந்தன.





     இட்லி, வடை சகிதம் கன்னியாகுமரியை காலி செய்துவிட்டு திருப்பரப்பு அருவி பக்கம் வண்டி கிளம்பியது. இதற்கு நடுவே மினரல் வாட்டரை கேனில் நிரப்பியும் விட்டோம். கிளம்புவதற்கு முன் மீண்டும் ஒரு முறை முதல் நாள் இரவில் திருவில்லிபுத்தூர் டவர் மொபைல்ஸ்க்கு முன்பு நின்று கொண்டிருந்த காமராசரை கன்னியாகுமரி காட்சியகத்தில் கண்டோம். அப்போது அவனுடன் கார்த்தி, பூவரசன், தேவி, காவ்யா ஆகியோர் இருந்தனர். இப்போது வண்டியை திற்பரப்புக்கு கிளப்புவது சரியாக இருக்கும்‌‌. திற்பரப்பில் ஒரு மேட்டில் சமையல் அடுப்பு, சமையலுக்கான பொருட்கள், பாத்திரங்களை அடுக்கி விட்டு டிக்கெட் எடுக்காமல் குளிக்கப் போன அனைவருக்கும் டிக்கெட்டுக்கு பணம் கொடுக்க ஓடியதில் இருந்து திற்பரப்பு கொண்டாட்டம் தொடங்குகிறது. இந்த இடத்தில் சட்டையை கழற்றிவிட்டு கல் மண்டபம் அடியில் அப்ராணியாக உட்கார்ந்து சுற்றி முற்றிப் பார்த்துக்கொண்டிருந்த ஜீவன்களை எல்லாம் கழற்றிவிட்டு நேராக அருவிப்பக்கம் செல்வதுதான் கொஞ்சம் ஜாலியாக இருக்கும். ஜாலிக்கு காரணம் மாரியப்பன் சார் தான். சத்தம் போட்டு கத்திக்கொண்டு ஆடி குளித்த நேரத்தில் ஒருவர் ஓடி ஒளிகிறேன் என பாறையில் முட்ட போனார். மற்றொருவர் என்ன செய்தார் என்பதை இங்கு சொல்லாமல் வேண்டுமெனவே நான் தவிர்த்துவிட்டு இத்துடன் குளியலை முடிக்கிறேன். குளியல் முடிவும் போட்டோசூட் தான். இவனும் கார்த்தியும் போட்டோ எடுத்துக் கொண்டனர். இப்போது கார்த்தியைப் பற்றி சொல்ல வேண்டியதிருக்கிறது. டூரில் வண்டிக்குள் ஏறும் நேரத்தையும் பூவார் பகுதியில் ஒன்றாக சேர்ந்து போன படகு பயணத்தையும் தவிர்த்து கார்த்தியை வேறெங்கும் அவனுடன் பார்த்திருக்க முடியாது. சரியாக சொல்லப்போனால் பூவாரு தீவில் மட்டும் தான் கடைசியாக அவன் மற்ற நால்வரோடு சேர்ந்து காட்சியளித்தான். மிருகக்காட்சி சாலையில் பூவரசன் தம்பி… வாடா.. என கூப்பிட்ட போது போ…யா .. என ஒருமையில் விளித்து அவரது இதயத்திற்குள் ஏழு இன்ச் ஆணியை அறைந்ததை தர்மா நேரில் பார்த்தேன் என இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட சொல்லியிருந்தார். கன்னியாகுமரியிலேயே வியர்க்க தொடங்கியதால் எப்போது குளிப்போம் என அனைவரும் இருந்தனர். இதில் சிலர் திற்பரப்பில் மீன் விற்பதை பார்த்துவிட்டு துட்டு எடுக்க என்னை அலைய விட்டதையும் பூவார் தீவுக்கு போன போது வாங்கிய மீனை தின்ன கொடுத்ததையும் மறந்து விடக்கூடாது. இந்த இடத்தில் மீனை குப்பை போல கொடுத்த அறிவாளிக்கும் அதை வாங்கி குப்பை என யோசிக்காமல் கீழே போட்ட பெரியவருக்கும் எனது வன்மையான கண்டனத்தை பதிவு செய்து கொள்கிறேன். யாராவது குப்பையை கையில் கொடுத்து கீழே போட சொல்வார்களா என்ற யோசனை இல்லாத ஒருவரை எந்த கணக்கில் சேர்ப்பது என்பதை இப்போது யோசித்துக் கொண்டிருக்கிறேன் மீனைக் கொடுத்தவர் ஒரு மிகப்பெரிய புத்திசாலி உள்ளே மீன் இருக்கிறது என சொல்லாமல் கொடுத்திருக்கிறார். வாங்கியவர் அவருடைய அண்ணன் பிறகு அவர் எப்படி இருப்பார் அவரைப் போல தானே. திற்பரப்பு முடிவதற்குள் பூவார் போய்விட்டேன் என என்னை யாரும் தவறாக நினைக்க வேண்டாம். உண்மையிலேயே காளான் பிரியாணியை வண்டியில் ஏற்றிவிட்டு திற்பரப்பு கேட் அருகே கேனில் தண்ணீர் பிடித்த பின் கேரளா பார்டரை நோக்கி பசியுடன் கிளம்பி விட்டாயிற்று. இதில் நடுவே ஆட வேண்டும் பாட்டு போடுங்கள் என்று கோரிக்கைகள் வேறு.


     மழை நன்றாக பெய்யத் தொடங்கிய நேரத்தில் பூவாரை நெருங்கி சென்றார்கள். எல்லோருக்கும் அந்த இடத்தை சுற்றிப் பார்த்து விடுவோமா என்ற சந்தேகம் வேறு. ஏனென்றால் மழை பெய்து கொண்டிருந்தது. நல்ல வேளையாக சாப்பிடுவதற்கு ஏற்ற பகுதிகளை உள்ளடக்கியதாக அந்த இடம் இருந்ததால் மதிய உணவை எடுத்துக் கொள்ள முடிந்தது. செட்டுக்குள் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு செட்டின் ஓட்டு வழியே வலியும் மழை நீரில் கைகழுவி கொண்டாயிற்று. பின்பு தான் படகு சவாரி. ஒரு படகிற்கு ஏழு பேர் அல்லது ஒன்பது பேர் என படகின் தன்மையை பொறுத்து பிரிந்து பயணத்திற்குள் புகுந்தோம். ஒரு நல்ல சூழலை ஏற்படுத்திய இடமாக அது அன்றைய பொழுதில் அமைந்தது. அங்கிருந்த தண்ணீர் பெரிதாக அழகான தோற்றத்தைக் கொண்டு கவரவில்லை என்றாலும் சுற்றி அடைத்திருந்த காடுகள் அங்கிருந்த பறவைகள் முதலியன ஏதோ ஓர் மரத்துப்போன தன்மையை மனதுக்குள் ஓட்டியது. சிலர் பறவைகளையும் காட்சிகளையும் படம் பிடிக்கவும் செய்தனர். அவன் படகின் முன் இருக்கையில் உட்கார்ந்து கொண்டு பிரிந்து கிடந்த டென்னிகட் வளையம் ஒன்றை வைத்து தானே படகை ஓட்டுவது போன்ற வேடிக்கையான சித்திரத்தை உருவாக்குவதில் கவனத்துடன் இருந்தான். அவனுக்கு அருகில் இருந்த இருக்கையில் தர்மசீலனும் அவனுக்குப் பின்னே பூவரசனும் பூவரசனுக்கு அருகில் சந்துருவும் சந்துருவுக்கு பின்னே கார்த்தியுமாக உட்கார்ந்து அந்தப் பயணத்தை மேற்கொண்டனர். அந்த அழகான காட்சியை தர்மசீலன் தான் படம் பிடித்தார். படம் பிடித்ததோடு நிற்காமல் 30 வினாடி ஸ்டேட்டஸாக அன்றைய நாள் இரவில் அதை தயார் செய்து தூள் கிளப்பி விட்டார். பயணத்தின் இடையே மாதா சிலை, ரிசார்ட் ரூம்கள், தண்ணீருக்கு நடுவில் மிதக்கும் ஹோட்டல்கள் என்று டூருக்கான மனநிறைவை அனைவருக்கும் கொடுக்கும் விதத்தில் பூவார் தீவின் படகுப் பயணம் அமைந்தது. கடைசியாக பயணித்த படகு அவர்கள் சென்ற படகு தான்‌. அவர்கள் பயணித்து சென்று கடலும் ஆறும் கலக்கும் கழிமுகத்தை காண முடியாமல் போனதுதான் வருத்தம். ஆனால் அதனை ஈடுகட்டும் விதமாக அவர்கள் இறங்கப் போகும் நேரத்தில் காற்றுடன் மழை பிடித்து விட்டது. நேரமும் அதிகமாக தொடங்கியதால் அப்போது அவர்கள் டூருக்கு வந்தவர்களாக யோசிக்காமல் டூரை ஒருங்கிணைக்கக் கூடியவர்களாக யோசிக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்குள் உந்தியதால் பயணத்தை வேகமாக முடிக்க வேண்டியிருந்தது. ஆதலால்  தீவு போன்ற பகுதிக்குள் அவர்கள் இறங்கவில்லை. எப்படியிருப்பினும் படகில் போகும்போது மழையினை நடு ஆற்றில் சந்தித்த அனுபவத்தைப் பிற படகுகளில் போனவர்களால் முழுமையாக அனுபவித்திருக்க முடிந்திருக்காது. அது ஒன்றுதான் பிறரிலிருந்து இவர்களை வேறுபடுத்தியது. அந்த கடற்கரைக்குள் அவர்கள் இறங்கவில்லை என்றாலும் கூட அங்கு விற்ற கட்டியான கடித்து உடைக்க முடியாத கொக்கொ மிட்டாய்கள் இவர்களை வந்து சேர்ந்தது. ஒரு சிலர் ஹோட்டலில் இறங்கி டீ குடித்திருக்கின்றார்கள். இப்படியாக அந்த பயணம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவத்தை தந்ததாக இருந்திருக்கிறது. படகுகளை மோதவிட்டு விளையாடிய பின்பு எல்லையை நோக்கி சென்றனர். இதற்கு இடையில் மாங்காய் போன்று இருந்த விஷக்காய்கள் நிறைந்த மாங்குரோவ் காடு காணப்பட்டது. படகு கட்டுவதையும் பார்க்க முடிந்தது. மழையின் போது படகு செல்வது சிரமமாக இருந்தாலும் முன் காட்சியில் முழுவதும் மழை மறைத்து நிற்கும் அளவிலான காலநிலை வாய்த்திருந்தது. அதனை நினைத்து பார்ப்பதே அந்த படகில் இருந்த ஐந்து பேருக்கும் ஒரு புத்துணர்ச்சியை இப்போது கூட கொடுக்கும் என அருதியிட்டுச் சொல்ல முடியும். படகோட்டியான ஜாய் ஐவரையும் போட்டோ பிடித்துக் கொடுத்தார். இந்த படகு பயணம் மேற்கொண்டு திரும்பிய சமயத்திற்குள் இரவு உணவுக்கான சிக்கன் குருமா தயாராகத் தொடங்கியிருந்தது. அது தயாரான பிறகு வண்டியில் ஏற்றிவிட்டு திருவனந்தபுரத்திற்கு சென்றார்கள். அங்குதான் ராத்திரி தங்கல்‌. 


      மழையும் குளியலும் அனைவரையும் மனதளவிலும் உடலளவிலும் அசத்த தொடங்கி விட்டது. ஒரு சிலர் தூக்கமும் வருகிறது வயிறும் பசிக்கிறது என வாய்விட்டு புலம்பாமல் மனதிற்குள் புழுங்குவதை அவன் அறிந்தே இருந்தான். சிலருக்கு தலைவலி, காய்ச்சல் முதலிய உபாதைகள் வருவதற்கு தொடங்கிய நேரத்தில் மாத்திரைகள் கேட்க ஆரம்பித்திருந்தனர். அப்போது அவன் தான் மாத்திரை கேட்பவர்களுக்கெல்லாம் தேவைப்படக்கூடிய அறைக்குச் சென்று கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தான். அதற்குள் தர்மசீலன் தனது எடிட்டிங் வேலையை முடித்த கையோடு படுத்து தூங்கி விட்டார். காலையில் தான் எழுந்தார் அவன் மாத்திரையை கொடுத்துக் கொண்டிருந்த நேரத்தையொட்டி ஒரு பக்கம் எண்ணெய் வேண்டும் சார்ஜர் வேண்டும் முதலான தேவைகளையும் சிலர் உரிமையுடன் சொல்ல தவறவில்லை. சந்துருவும் பூவரசனும் தூங்கவில்லை. கீழே சமையல் பணியில் ஈடுபட்டிருந்தனர். கார்த்தியும் அவனும் தர்மசீலனோடு கொஞ்ச நேரம் உறங்கி விட்டனர்‌. பின்பு சாப்பாட்டு நேரத்தில் கார்த்தியும் அவனும் இணைந்து சாப்பிட்டனர். சாப்பிட்டு முடித்த பிறகு சின்னப் பையன் ஒருவனோடு வாழைப்பழம் வாங்கி தர அவன் கடைக்கு சென்று விட்டான். போய் வந்த பின்பு அவனுக்கு தூக்கம் இல்லை ஹோட்டல் அறையின் பலகனி அருகே நின்று கொண்டும் உட்கார்ந்து கொண்டும் சந்துரு, பூவரசன், அவன் மூவரும் அன்றைய நாள் நிகழ்ச்சிகளையும் நெகிழ்ச்சிகளையும் சந்தோசமான தருணங்களையும் இக்கட்டான வேலைகளையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு இருந்தனர். அது முடிந்த பிறகு அடுத்த நாளைக்கான திட்டங்களையும் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். அப்போது காலை பத்மநாபசாமி கோவிலுக்கு போகும் திட்டம் கேள்விக்குறியாக்கப்பட்டது‌. இப்படியான உரையாடல் முடிந்ததும் அறையின் தரையில் பூவரசனும் சந்துருவும் படுத்துக்கொண்டனர் தர்மசீலன் கார்த்தி படுத்தது போக கட்டிலில் மீதம் இருந்த இடத்தில் அவன் படுத்து விட்டான். அந்த ஹோட்டலில் சில அறைகளில் ஏதாவது பார்க்க வேண்டும் என மலையாள சேனல்களையும் சிலர் பார்த்துக் கொண்டிருந்தனர். இப்படியானதாக அன்றைய இரவு கழிந்தது.


      காலை எழுந்தவுடன் கடைக்கு சென்று டீ குடிக்க போக வேண்டுமென அழைப்பு வந்ததன் பேரில் ஒன்றாக சேர்ந்து டீ குடித்து விட்டு மீண்டுமாக அறைக்கு திரும்பினார்கள். காலை சமையல் தயாராக தொடங்கியிருந்தது. காலை நேர உணவை சொல்லும் நேரத்தில் முந்தைய நாள் உணவை குறித்து சொல்ல மறந்தது இப்போது நினைவுக்கு வருகிறது. முந்தைய நாள் இரவு உணவுக்கான தாமதத்திற்கு காரணம் சப்பாத்தி தான். சப்பாத்தியை தேய்ப்பது அடுப்பில் போட்டு எடுப்பது அதிக நேரத்தை எடுத்ததால் உணவுக்கு தாமதம் ஆகிவிட்டது. காலையில் சிலர் கோவிலுக்கு போகலாம் என கிளம்பியிருந்த நேரத்தில் சில குழப்பங்கள் திட்டத்தை மீறி நடக்க தொடங்கியிருந்தது. அதனை சமாளிக்க சந்துருவும் அவனும் தர்மசீலனும் மாறி மாறி போய் கலந்து பேசி தங்கள் திட்டத்தை செயல்படுத்த தீவிரம் காட்டினார்கள். இந்த நேரத்தில் தான் சமையல்காரர்கள் போய் குளித்துவிட்டு திரும்பினார்கள். காலை உணவை முடித்த பிறகு பயணம் திருவனந்தபுரம் மிருகக்காட்சி சாலை தான். மிருகக்காட்சி சாலையில் மாணவர்களுக்கான தொகை குறைப்பு நடவடிக்கைகள் எல்லாம் மேற்கொள்ளப்பட்டன. மிருகங்கள் எல்லாம் இருந்தன என்றாலும் கூட அது பெரிதாக எத்தனை பேரை கவர்ந்தது என்பது சரியாக சொல்ல முடியவில்லை. ஒரு சிலருக்கு பூவார் தீவுடனேயே பயணம் சிறப்பாக இருந்தது இனிமேல் என்ன ஆனால் என்ன என்பது போன்று ஒருவித நிறைவு ஏற்பட்டுவிட்டது‌. மிருகங்களைத் தாண்டி அந்த மிருகக்காட்சி சாலைக்குள் நடந்து சென்றது ஒரு நல்ல மறக்க முடியாத அனுபவமாகும். குழுக்குழுவாக பேசிக்கொண்டு நடக்கும் சாத்தியத்தை மிருகக்காட்சி சாலை திறந்து வைத்திருந்தது. இதில் சிலர் நடக்க முடியாமல் கல் இருக்கைகளில் உட்கார்ந்து விட்டனர். பலவிதமான மிருகங்கள் இருந்தாலும் சிலர் மான் எங்கள் ஊரில் இருந்து தான் இங்கே கொண்டு வந்திருக்கின்றனர் போன்ற உருட்டுகளை உருட்டத் தொடங்கி விட்டிருந்தனர். எல்லாவற்றையும் காது கொடுத்து கேட்க வேண்டிய நிலையில் அவன் இருந்தான்‌. முதலை கல்லில் செய்யப்பட்டிருப்பது தத்ரூபமாக இருந்தது. அதே நேரத்தில் சிங்கம் அசையாமல் இருந்தது சிலை போன்றிருந்தது இப்படியான சில அனுபவங்களை அங்கு பெற முடிந்தது. ஆந்தைகள் முதலான பலவிதமான பறவைகளையும் விலங்குகளையும் பார்த்த கையோடு வேறு சில இடங்களையும் சுற்றி பார்க்க தொடங்கினர். இருவர் சின்ன பிள்ளைகள் என்ற நினைப்பில் சீசா விளையாடிக் கொண்டிருந்தனர். அது வானத்துக்கே பொறுக்கவில்லை. மழையை வரவைத்து விட்டது. எல்லா வருடமும் நீங்களே வந்து டூரை நடத்திக் கொடுக்கலாம் என சொல்லும் அளவிற்கு இவர்களைக் கோலோச்ச தொடங்கியிருந்தனர். அந்த சமயத்தில் சந்துருவுக்குள் ஒருவித பெருமிதமும் தர்மசீலனுடைய கால் தரையில் நிற்காத நிலையும் அவனுக்கு இதுதான் சமயம் என பலவித உருட்டுகளை உருட்டக்கூடிய வாய்ப்பும் அமைந்துவிட்டது. நல்ல வேலை மழை சுற்றிப் பார்த்ததற்கு பின்பு பெய்தது என்ற ஒரு திருப்தியுடன் வண்டியை வரச் சொல்லி அனைவரும் வரிசையாக மிருகக்காட்சி சாலையை விட்டு கடந்து வண்டிக்குள் ஏறினர். மழையில் நனைந்ததும் ஒவ்வொருவருக்குள்ளும் ஏதோ ஓர் அசௌகர்ய நிலை இருந்தது வெளிப்படையாக தெரிந்தது. உரிமையுடன் அவனுடைய துண்டை பலர் வண்டிக்குள் உபயோகப்படுத்தினர். இதற்கு நடுவில் ஆட்டங்கள் வேறு தொடங்க ஆரம்பித்திருந்தது. மழையில் நனைந்திருத்தல், வியர்வை என ஒருவித கலவை அனைவரையும் பிடித்துக் கொண்டது. மாரியப்பன் சார் தம்பதியாக தன்னுடைய ஆனந்தத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். 


      காலையிலேயே மதியத்துக்கான உணவை தயார் செய்திருந்ததால், சண்முகா பீச் சென்று சாப்பிட்டு விட்டு கொஞ்ச நேரம் அங்கு நேரத்தை செலவிட்டு விட்டு திரும்பினர். கடற்கரையில் சிலருக்கு பாப்கார்ன் ஆசை வேறு. அதற்குப் பின் லூலூ மால் பக்கம் வண்டி கிளம்பியது. அங்கு எதையும் வாங்குவதற்கு போகவில்லை. சுற்றிப் பார்க்க மட்டுமே சென்றனர். சுற்றிப் பார்த்தது போக உருப்படியாக செய்தது ரோலர் கோஸ்டரில் சென்றது தான். அங்கும் புகைப்படம் எடுத்து விட்டு கீழே இறங்கினர். பூவரசனும் அவனும் பாத்ரூம் சென்ற போது அது பெண்கள் போகும் இடம் என கத்தியதும், சந்துரு பேசிக்கொண்டே எங்கே போகிறோம் என தெரியாமல் பெண்கள் கழிப்பறை வரை போனனதும் இதில் தனித்துப் பார்க்கவேண்டிய நிகழ்வுகள். அதற்குப் பின்பு வர்கலா பீச்சில் ஒலித்த வராகா நதிக்கரையோரம் பாட்டைக் கேட்டுவிட்டு உப்புமா சாப்பிட்டதோடு பயணம் நிறைவடைந்தது. பயணம் முடிந்து வீட்டுக்கு திரும்பும் வழியில் இடையில் பாத்ரூம் போக வண்டி நின்றபோது ஒரு அசம்பாவித சம்பவம் நூலிழையில் நிகழ இருந்தது. வண்டியில் இருக்கைக்குக் கீழ் தர்மசீலன் படுத்திருக்கிறார். அவன் கீழே போக இருக்கையில் இருந்து அவரது கழுத்தையொட்டி குதித்து மரண பயம் காட்டிவிட்டான். கையையும் காலையும் வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல் இருந்ததன் விளைவாக தேசிகாவிற்கு இருக்கைக்கு அடியிலிருந்த கம்பி கிழித்து ரத்தம் வந்தது‌. ராசாத்தி சந்துருவிடம் இரத்தம் வருகிறதென சொன்ன போது தூக்கத்திலிருந்த அவர் ஹோட்டலில் ரத்தம் ஆர்டர் செய்தது போல ரத்தமா என கண்ணை மூடிக் கொண்டே கேட்கிறார். பின்பு சந்துரு இரத்தத்தை துடைத்து பேன்டேஜ் ஒட்டினார். எல்லோரும் தூங்க ஆரம்பித்து விட்டனர்.


     - அழகுராஜ்

Comments

Popular posts from this blog

இரண்டு முதல் ஐந்து வரையிலான நான்கு எனப்படும் ஐந்து திங்கள்கள்